×

வீட்டை உடைத்து துணிகர கொள்ளை: 2 பேர் கைது

குன்றத்தூர்: கடந்த சில தினங்களாக மாங்காடு சுற்று வட்டாரப்பகுதிகளில் அதிக அளவில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க மாங்காடு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையடித்தவர்கள் விநோதமாக, ஆள் அடையாளம் தெரியாமல் இருக்க முகம் முழுவதும் துணிகளை சுற்றி அதன் மேல் ஹெல்மெட் அணிந்திருந்தது தெரிய வந்தது.  

இதையடுத்து ஆவடி அடுத்த பட்டாபிராமை சேர்ந்த சூர்யா (23), சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மாட்டு சங்கர் (38) என்பவர்கள் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில் இருவரும் வெவ்வேறு குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிறையில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஜாமீனில் வெளிவந்தவர்கள். இவர்கள் வைபை டாங்கில் வாங்கியுள்ளனர். செல்போன் மூலம் பேசினால் போலீசார் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் வைபை மூலம் ஓருவருக்கொருவர் தொடர்பு கொண்டுள்ளனர். அதன் மூலம் வாட்சப் வீடியோ கால் வாய்ஸ் காலில் பேசியுள்ளனர்.  

சிசிடிவியில் முகம் பதிவாகும் என்பதால் முகம் முழுவது துணியால் சுற்றியுள்ளனர். மேலும் இருவரும் திருடும் வீடுகளில் விலை உயர்ந்த பைக் இருந்தால் அந்தபைக் மற்றும் ஆவணத்துடன் சேர்த்து திருடுவார்கள். பைக்கை ஆவணத்துடன் நல்ல விலைக்கு விற்றுவிடுவதாகவும் போலீசாரிடம் வாக்குமூலத்தில் கூறினார். போலீசார் அவர்களிடம் இருந்து 35 பவுன் நகை மற்றும் இரண்டரை கிலோ வெள்ளி பொருட்கள், 3 மோட்டார் சைக்கிள்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.


Tags : Venture burglary: 2 arrested
× RELATED மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை