×

அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது: போடியில் ஓபிஎஸ் உறுதி

போடி: தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, தேனி மாவட்டம், போடியில் நேற்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் போடி தொகுதி எம்எல்ஏவும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மேகதாது அணையை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளோம். ஒரு குடும்பத்தினரின் ஆதிக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தி, அதிமுகவை மீட்டுள்ளோம். அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது. நாங்கள் கட்சியை விட்டுத் தர மாட்டோம்.

நானும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து, கட்சியை நல்ல முறையில் நடத்தி வருகிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஆஜராக உள்ளேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்யாததே சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணமென அன்வர் ராஜா கூறி உள்ளார். நான் அதை மறுக்கிறேன். தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆரை முன்னிறுத்தியே பிரசாரம் செய்தோம் என்றார்.

* சசிகலாவின் பேச்சுக்கு பதில் அளிக்க மறுப்பு
டெல்லி சென்று திரும்பிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ‘‘உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடந்தாலும் அதிமுக அதை எதிர்கொள்ள தயாராக உள்ளது’’ என்றார். அப்போது நிருபர்கள், ‘‘மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவோமென டிடிவி.தினகரன் பேசியுள்ளாரே?’’, ‘‘முன்னாள் அமைச்சரின் பினாமி ஒருவரது வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனரே?’’, ‘‘அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று சசிகலா பேசியுள்ளாரே?’’ என அடுத்தடுத்து கேள்விகளை கேட்டனர். ஆனால் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் ஓபிஎஸ் அங்கிருந்து வேக வேகமாக கிளம்பிச் சென்றுவிட்டார்.

Tags : No one can capture the superpowers: OPS commitment in the competition
× RELATED சொல்லிட்டாங்க…