சென்னை: அபராதமாக விதிக்கப்பட்டுள்ள ரூ.1 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என்று ஐகோர்ட்டில் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.நடிகர் விஜய், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்ததோடு, ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனு மீதான நேற்றைய விசாரணையின் போது, நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அபராதம் செலுத்திவிட்டு அறிக்கை தர உத்தரவிட்ட வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அபராதத்திற்கு இடைக்கால உத்தரவு பெறப்பட்டதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ரூ.1 லட்சத்தை நிவாரண நிதியாக ஏன் செலுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த விஜய் தரப்பு, இந்த வழக்கில் அபராதமாக விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் ரூபாய் நிதியை நிவாரண நிதியாகத் தர விரும்பவில்லை என்றும் கடந்த ஆண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 25 லட்சம் வழங்கிவிட்டதாகவும் விளக்கமளித்துள்ளது. இதையடுத்து இவ்வழக்கை தனி நீதிபதி முடித்து உத்தரவிட்டுள்ளார்.