தஞ்சை: கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களின் ரூ.600 கோடி நிதி மோசடி வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் கணேஷ், சுவாமிநாதன் சகோதர்கள். ஹெலிகாப்டர்கள் சகோதரர்கள் என அழைக்கப்படும் இவர்கள் நிதிநிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்து விட்டதாக புகார்கள் குவிந்துள்ளது. 600 கோடி ரூபாய் வரை பலரிடம் மோசடி செய்துள்ளதாக கும்பகோணம் நகரம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டினர். இதனால் இந்த விவகாரம் அனைவரின் கவனத்திற்கும் சென்றது.
இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த ஜபருல்லா - பைரோஜ் பானு தம்பதியினர், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் சில தினங்களுக்கு முன்பாக, கணேஷ்– சுவாமிநாதன் தங்களிடம் சுமார் ரூ.15 கோடி வரை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தனர். புகாரின் அடைப்படையில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்து பல நபர்களை ஏமாற்றிய ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களிடம் செலுத்திய பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர்கள் கோரிக்கை விடுத்து இருந்த நிலையில் சகோதரர்களில் ஒருவரான கணேஷின் மனைவி அகிலா, பால்பண்ணையின் மேலாளர் வெங்கடேசன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.