×

அதிமுக-வில் ஒற்றை தலைமை மீண்டும் வரும் என்ற டிடிவி தினகரன் கருத்துக்கு மௌனம் சாதித்த ஓ.பன்னீர்செல்வம்..!!

மதுரை: அதிமுக-வில் ஒற்றை தலைமை என்ற நிலை மீண்டும் வரும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கும் நிலையில் அதை பற்றி மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் சாதித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அதிமுகவை மீட்க வேண்டும் என்பது தான் தங்களின் இலக்கு என்றும் அந்த இலக்கை நோக்கி பயணிப்பதாகவும் கூறினார். அதிமுக தொடங்கியது முதல் ஒற்றை தலைமையில் தான் கட்சி இருந்ததாக கூறிய தினகரன், தற்போது அந்த நிலை மாறி இருப்பதாகவும் அவை மீண்டும் சரியாகும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு மதுரை விமான நிலையம் வந்தடைந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுகவில் மீண்டும் ஒற்றை தலைமை கட்சியை கைப்பற்றுவோம் என டிடிவி தினகரன், சசிகலா கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளிக்காமல் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டு சென்றார். சசிகலா, டிடிவி தினகரன் கூறிய கருத்துக்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் ஏதும் அளிக்காமல் சென்றது அந்த கட்சியினர் மத்தியிலேயே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : DTV ,Dinagaran , AIADMK, single leader, DTV Dinakaran, O. Panneerselvam
× RELATED விதிமீறலில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு