டெல்லி: பள்ளிகளை எப்போது திறப்பது குறித்து மாநில அரசுகளின் முடிவே இறுதியானது என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது.
தற்போது கொரோனா தொற்று நாடுமுழுவதும் குறைந்து வருவதை அடுத்து விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று பரவும் ஆபத்தான சூழலில் முடிவெடுப்பது கடினம் தான் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.
இது தொடர்பான கவனத்தையும் கொண்டு மாணவர்களின் கல்வி இழப்பு குறித்து ஆலோசிக்குமாறு மாநில அரசுகளை நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கேட்டுக் கொண்டுள்ளார். ஒன்றிய அரசின் அறிவுறுத்தல்களை கவனமாகப் பின்பற்றும்படியும் இளம் வயதினருக்கான தடுப்பூசி குறித்து மருத்துவ ஒழுங்குமுறைக் குழுவின் முடிவைப் பொருத்து நடவடிக்கை எடுக்கவும் பள்ளிகளுக்கு வி.கே.பால் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.