ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் பேரறிவாளன். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவருக்கு சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளுக்காக அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வரிடம் பரோல் வழங்க மனு அளித்தார். அதன்படி பேரறிவாளனுக்கு கடந்த மே மாதம் 28ம் தேதி ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை அடுத்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 28ம் தேதி பரோல் முடிந்தாலும் அற்புதம்மாளின் கோரிக்கையேற்று மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கியது. அந்த பரோலும் இன்றுடன் முடிந்து மீண்டும் புழல் சிறைக்கு செல்ல இருந்தார். ஆனால், அற்புதம்மாள் மீண்டும் ஒருமாதம் கோரிக்கை விடுத்தார். இதை பரிசீலித்த தமிழக அரசு, 3வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கி நேற்று உத்தரவிட்டது.