×

ஆவின் கொள்முதலில் ரூ.10.37 கோடி ஊழல்: முக்கிய கோப்புகள் மாயம்; துணை போனவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை

சென்னை: ஆவினில் கடந்த காலங்களில் விளம்பரம் செய்ததில் ரூ.10.37 கோடி ஊழல் நடைபெற்றதும், அது தொடர்புடைய ஆவணங்கள் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான ஆவினில், கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தவாறு உள்ளது. இந்தநிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆவின் நிறுவனங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தொடர் ஆய்வின் மூலம் ஆவின் நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதேபோல், இனிப்பு விற்பனை, டெண்டர், வரவு-செலவு கணக்குகள், பணி நியமனம், ஜெனரேட்டர் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஊழல் நடந்துள்ளதாக தொடர்ந்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. எனவே, மாவட்டம் வாரியாக உயர் அதிகாரிகள் முதல் கீழ்நிலை அதிகாரிகள் வரை ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவின் வர்த்தகப் பிரிவு பொது மேலாளர்கள் உள்ளிட்ட 34 முக்கிய அதிகாரிகளை இடமாற்றம் செய்து ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து, ஆவினுக்கு விளம்பரம் செய்ததில், ரூ.10.37 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுதொடர்புடைய கோப்புகள் மாயமாகி உள்ளது. எனவே, ஆவினுக்கு நிதியிழப்பை ஏற்படுத்தியதால் 7 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  

இதுகுறித்த ஆவின் நிர்வாகத்தின் உத்தரவில் கூறியிருப்பதாவது: விளம்பரச்செலவுகள் முன் ஆண்டில் நிகர விற்று முதலில் 1/10ல் ஒரு சதவீதம் மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும். அதன்படி, 1/10ல் 1 சதவீதம் ரூ.5.63 கோடி மட்டும் செலவு செய்யப்பட வேண்டும். ஆனால், செலவு செய்யப்பட்ட தொகை ரூ.10.37 கோடி ஆகும். திறந்தவெளி ஒப்பந்தபுள்ளி சட்டம் பின்பற்றப்படவில்லை. மொத்த செலவு தொகை ரூ.10.37 கோடியில் விசாரணைக்கு சமர்ப்பிக்கப்பட்ட செலவு தொகை 78 கோப்புகளின் படி ரூ.4.44 கோடி ஆகும். மிதமுள்ள ரூ.5.93 கோடி செலவிடப்பட்ட கோப்புகள் அழிக்கப்படவோ அல்லது தொலைக்கவோ செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டிற்கு வியாபார பிரிவும், தணிக்கைத்துறையும் மொத்த பொறுப்பாகும். ஒப்பந்தகுழு பரிசீலனை உறுப்பினர்களாக டி.ரவிசந்திரன், எஸ்.மணிசேகரன், ஜீவபிரியா, எம்.ரவி ஆகியோர் முறைகேடாக கோப்புகளை கையாண்டு நிதியிழப்புக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர். எனவே, ஆவணங்கள் அழித்தும், தொலைக்கவும், மோசடி செய்து உடந்தையாக இருந்து கடமை பொறுப்புகளில் இருந்து தவறி செயல்பட்ட அதிகாரிகள் ரமேஷ்குமார், ரவி, ஜெயபாலன், சந்திரசேகரன், ரவிச்சந்திரன், ருஷ்யாராணி, லோகநாதன், பிரமிளா ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கைக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Avin , Rs 10.37 crore scam in Avin purchase: Key files magic; Criminal action against accomplices
× RELATED சென்னையின் பல்வேறு பகுதிகளில் பால்...