அண்ணா நகர்: சென்னை கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், நூறடி சாலை - காளியம்மன் கோவில் சாலை, புறநகர் பேருந்து நிலையம் நுழைவாயில் ஆகிய சந்திப்புகளை இணைத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.94 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக மேம்பால கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த மேம்பாலம் திறக்கப்படும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஆனால், கொரோனா காரணமாக பணிகள் அனைத்தும் தொய்வடைந்ததை அடுத்து மேம்பாலம் திறக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அடுத்த மாதம் கோயம்பேடு மேம்பாலம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கோயம்மேடு மேம்பால பணியை கடந்த 18ம் தேதி அன்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், கோயம்பேடு மேம்பாலம் மற்றும் வேளச்சேரி மேம்பால பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கோயம்பேடு மேம்பால பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மேம்பாலங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். தற்போது, மழை காலம் என்பதால் மழை இல்லாத நேரங்களில் பணிகளை மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். தமிழகத்தில் உள்ள எல்லா மேம்பாலங்களையும் திமுகதான் கட்டியது. வரும் காலங்களிலும் மேம்பாலங்கள் தேவைப்பட்டால் மக்களுக்காக கட்டித்தரப்படும் என்றார்.