புதுச்சேரி : நாடு முழுவதும் கார்கில் வெற்றி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி புதுச்சேரியில் அரசு சார்பில் கார்கில் வெற்றி தினம் கடற்கரை சாலையில் நடைபெற்றது.
பிரெஞ்சு தூதரகத்திற்கு எதிரிலுள்ள கார்கில் போர் வீரர்கள் நினைவிடத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மலர்வளையம் வைத்து கார்கில் போரில் நாட்டிற்காக தங்களுடைய இன்னுயிரை ஈந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சிவில் சப்ளை அமைச்சர் சாய் சரவணன்குமார் ஆகியோர் கார்கில் வெற்றி தினத்தையொட்டி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார், விபி ராமலிங்கம், அசோக் பாபு, திமுக எம்எல்ஏ சம்பத், தலைமைச் செயலர் அஸ்வனி குமார், ஏடிஜிபி ஆனந்தமோகன், செய்தி விளம்பரத்துறை செயலர் உதயகுமார், கலெக்டர் பூர்வா கார்க் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.
பாஜகவினர் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில், கார்கில் வெற்றி தினத்தை கொண்டாடினர். அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏ ஜான்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட பலர் கார்கில் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.