கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம் 9 ஆயிரத்து 12 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை வகித்து, தண்ணீரை திறந்து வைத்தார். பர்கூர் மதியழகன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். கால்வாயில் பொங்கி வந்த தண்ணீரில் மலர் தூவப்பட்டது. பின்னர், கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறியதாவது:
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணகிரி அணையில் இருந்து வலது, இடதுபுற பிரதான கால்வாய்கள் வழியாக 180 கனஅடி வீதம், நவம்பர் மாதம் 22ம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன்மூலம் கிருஷ்ணகிரி தாலுகாவில் பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டி அள்ளி, நாகோஜன அள்ளி, ஜனப்பரஅள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9 ஆயிரத்து 12 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூலை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் சையத், பிஆர்ஓ ராம்குமார், திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், கவுரப்பன், சக்திவேல், முருகன் மற்றும் அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.