பந்தலூர் : பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழைக்கு பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பந்தலூர் சுற்று வட்டாரப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழையில் மாவட்டத்தில் அதிகபட்சமாக பந்தலூரில் 156 மிமீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கனமழைக்கு பந்தலூர் அண்ணாநகர் பகுதியில் முத்துசாமி என்பவரது வீடு இடிந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆபத்தான பகுதிகளில் தடுப்புச்சுவர் அமைத்திட அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மேலும் பந்தலூர் பாறைக்கல் சாலைப்பகுதியில் நடைபாதையோரங்களில் மண்சரிவு ஏற்பட்டு நடைபாதை முழுதும் சேறும் சகதியுமாக உள்ளது. பந்தலூர் தியேட்டர் ரோடு பகுதியில் உம்மர் என்பவரது வீட்டின் அருகே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
பந்தலூர் இரும்புபாலம் குடியிருப்பு பகுதியிலும் மண்சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்மழை நீடிப்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அம்பலமூலா அருகே வெள்ளேரி ஆற்றோரம் குடியிருந்து வரும் மணல்வயல் ஆதிவாசி காலனியில் 8 குடும்பங்களை சேர்ந்த 30 பேரை பந்தலூர் தாசில்தார் குப்புராஜ் உத்தரவின்பேரில் அம்பலமூலா அரசு பள்ளியில் முகாம் அமைத்து வருவாய்துறையினர் தங்க வைத்துள்ளனர். தொடர் மழை காரணமாக பல இடங்களில் சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.