×

திருப்பத்தூர் அடுத்த அகரம் பகுதியில் 600 ஆண்டு பழமையான செப்பு பட்டயம் கண்டெடுப்பு

*கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தை சேர்ந்தது

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அடுத்த அகரம் பகுதியில் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்கால 600 ஆண்டு பழமையான செப்பு பட்டயம் கண்ெடடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் ஆ.பிரபு, சமூக ஆர்வலர் வே.ராதாகிருஷ்ணன்  ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் 600 ஆண்டுகள் பழமையான அரிய வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய செப்பு பட்டயத்தினைக் கண்டறிந்தனர்.

இதுகுறித்து பேராசிரியர் ஆ.பிரபு கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவணப்படுத்தப்படாத எண்ணற்ற வரலாற்றுத் தடயங்களை நாங்கள் வெளிப்படுத்தி வருகிறோம். அவ்வகையில் வழக்கமான கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டபோது, இயற்கை மீட்பு அறக்கட்டளையைச் சார்ந்த கால்நடை மருத்துவர் அன்புச் செல்வம் அளித்த தகவலின் அடிப்படையில் நடுகல் ஒன்றை காண அகரம் என்ற இடத்திற்குச் சென்றோம்.

அப்போது, அவ்வூரில் உள்ள லட்சுமி நாராயணசுவாமி கோயில் தர்மகர்த்தா பலராமனிடம் செப்பு பட்டயம் இருப்பதாக தெரிவித்தார்.  அந்த செப்பு பட்டயத்தினை பெற்று சுத்தம் செய்து படித்தபோது, அப்பட்டயம் 600 ஆண்டுகள் பழமையான விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தை சேர்ந்தது என்பதை அறியமுடிந்தது.  பட்டயத்தில் இவரது மெய்க்கீர்த்தி சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. செப்புப்பட்டயமானது 615 கிராம் எடையோடு, 36 செ.மீ நீளமும், 23.5 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது. இரண்டு பகுதிகளாக உள்ள இதனை துளையிட்டு வளையங்களால் இணைத்துள்ளனர். மேற்புறம் அழகிய வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப்பட்டு, சூரியன், பிறைச்சந்திரன் சாட்சியங்களாகவும், அதன் கீழே வலதுபுறம் விநாயகர், இடது புறம் காளை உருவமும் நடுவே சிவ லிங்கமும் வரையப்பட்டுள்ளன.

இவற்றின் கீழே ‘சிவன்துணை அருணாத்திரி யீஸ்வரர் சாதனப் பட்டயம்’ என்று தொடங்கி 46 வரிகள் எழுதப்பட்டுள்ளன. கி.பி. 1515ம் ஆண்டு எழுதப்பட்ட இப்பட்டயம் திருவண்ணாமலை ‘தனியூர்’ தகுதி பெற்றிருந்ததை விளக்குகிறது. தொண்டை மண்டலத்தில் உள்ள 24 கோட்டங்கள், 79 வளநாடுகளில் வாழும் பெரியநாட்டவர்கள் எனப்படும்  சைவ வேளாளர்கள் இணைந்து திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கல்யாணத்திற்கும் அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நந்தவனப் பராமரிப்புக்கும் நன்கொடை வழங்கியதை அறிவிக்கிறது.

இதனைப் பாதுகாப்பவருக்கு வாக்கு சகாயம், சரீர சகாயம், அறத்த சகாயம் கிடைப்பதோடு கோதானம், பூதானம், கன்னிகாதானம், அன்னதானம், சொர்ணதானம், வலைத்திரதானம் பெறக்கடவது என்று எழுதப்பட்டுள்ளது. இதற்குத் தீங்கு விளைவிப்போர் பசுவைக்கொன்ற, சிசுவைக் கொன்ற தோஷத்தையும் பிரம்மஹத்தி தோஷத்தையும் பெறுவார்கள் என விவரிக்கப்பட்டுள்ளது. தொண்டை மண்டலமானது 24 கோட்டங்களை உள்ளடக்கியது என விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

அவை, புழல் கோட்டம், புலியனூர் கோட்டம், மடியகாட்டுக் கோட்டம், மண்ணூர் கோட்டம், செங்காடுக் கோட்டம், பயனூர் கோட்டம், எயில் கோட்டம், தாமல் கோட்டம், ஊத்துக்காட்டு கோட்டம், களத்தூர் கோட்டம், செம்மூர் கோட்டம், இத்தூர் கோட்டம், ஆமூர் கோட்டம் வெங்குணக் கோட்டம், பல் குணக்கோட்டம், இளங்காட்டுக் கோட்டம், காளியூர் கோட்டம், சிறுகனார் கோட்டம், படூர் கோட்டம், கடிகைக் கோட்டம், செந்தீரக் கோட்டம், குணபத்திரக் கோட்டம், வேங்கிடக் கோட்டம், வேலூர் கோட்டம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. அரிய வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய இந்த செப்புப்பட்டயம் தொண்டைமண்டல வரலாற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதுகுறித்த மேலாய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Tirupatur , Thirupathur,Copper sword,Krishnadevarayar, Arunachaleshwarar Temple
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் தன்னை...