×

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில் 'வென்று வா வீரர்களே'என்ற பாடலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில் வென்று வா வீரர்களே என்ற பாடலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக விளையாட்டு வீரர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 16.7.2021 அன்று காணொலிக் காட்சி மூலமாக பேசும் போது, “இந்த அரசு விளையாட்டுத் துறைக்கு ஊக்கமளிக்கும் அரசாக இருக்கும். இந்த அரசுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் நீங்கள் அனைவரும் பதக்கத்துடன் வரவேண்டும். அனைவரும் பதக்கம் பெற எனது வாழ்த்துக்கள்” என்று உற்சாகப்படுத்தி வாழ்த்தினார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று (26.7.2021) தலைமைச் செயலகத்தில், டோக்கியோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நம் மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழகத்தால் தயாரிக்கப்பட்டு, இசையமைப்பாளர் திரு. யுவன் சங்கர் ராஜா அவர்களால் இயற்றி இசை அமைக்கப்பட்ட வென்று வா வீரர்களே என்ற பாடலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாண்புமிகு சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சிவ.வீ. மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  திரு. அபூர்வ வர்மா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் திரு. ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப., தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு.ஆதவ் அர்ஜூன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : TN ,Olympics ,Stalin , மு.க. ஸ்டாலின்
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...