இளையான்குடி : இளையான்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை கட்டிடம் இடியும் நிலையில் உள்ளது. புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இளையான்குடி பகுதியில் உள்ள சுமார் 90 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இளையான்குடி அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று செல்கின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பெறுவதற்கும், முதலுதவி சிகிச்சை பெறவும் இளையான்குடி அரசு மருத்துவமனையை நம்பியே அப்பகுதி மக்கள் உள்ளனர்.
ஆனால் ஆபத்து காலத்தில் சிகிச்சை பெறும் அவசர சிகிச்சை கட்டிடம் மிக அபாயத்தில் உள்ளது. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவமனையில் செயல்படும் இந்த கட்டிடம், உறுதி தன்மை இழந்துள்ளது. மழை நீர் கட்டிடத்தின் உள் புகுந்ததால் பக்கவாட்டு சுவர்கள், மேல்கூரை விரிசல்கள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. அதனால் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது. அதனால் அந்த பிரிவில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக ஆட்சியில் இளையான்குடி அரசு மருத்துவமனையில் புதிய அவசர சிகிச்சை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.