×

தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு : முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமாருக்கு நோட்டீஸ்!!

சென்னை : சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விராலிமலையில் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி பாரதிதாசன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், 23 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள், பணம் ஆகியவை வினியோகித்து ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார் எனவும், அதனால் அவர் வெற்றி பெற்றதாக அறிவித்ததைச் செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், வாக்குகளைக் கவர முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததற்கு அதிகமாகச் செலவு செய்துள்ளதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டுக் கருவிகளில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதே போல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து திமுக சின்னத்தில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்  பாலு என்பவர் தேர்தல் வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த 2 வழக்குகளும் இன்று நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது.விசாரணையின் போது, வழக்கு தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று   
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் அதிகாரிகள், தொகுதியின் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Tags : Former Minister ,C. Vijayabaskar ,MLA ,Jayakumar , சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர்
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்