×

கார்கில் போர் வெற்றி தினம் இன்று.. ராணுவ வீரர்களின் வீரம் தினந்தோறும் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி: கார்கில் போரின் வெற்றி தினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வீரர்களை நினைவு கூர்ந்துள்ளார். இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் ஊடுருவினர். இதையடுத்து கார்கில் பகுதியிலிருந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விரட்டியடிக்க இந்தியா தயாரானது. அந்த போர் திட்டத்துக்கு ஆப்ரேஷன் `விஜய் என்று பெயரிடப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக கார்கில் லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. உயரமான மலைத்தொடர்களில் மிகுந்த சவால்களை எதிர்கொண்ட இந்த போரில் 527 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதில் 4,000க்கும் அதிகமான பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்த போரானது அந்த ஆண்டு மே மாதம் தொடங்கி ஜூலை வரை நடைபெற்றது.

இந்த போரில் இறுதியாக இந்தியா வெற்றி வாகை சூடியது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பால் பாகிஸ்தானிய படைகள் பின்வாங்கின. இந்த போரில் வீரமரணமடைந்த இராணுவ வீர்ரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்  டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறுகிறேன். நமது நாட்டைக் காப்பாற்றுவதற்காக கார்கில் போரில் பங்கேற்று தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் வீரம் எங்களுக்கு, தினம்தோறும் உத்வேகம் அளித்து வருகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த வருடம் வானொலி உரையில் கார்கில் போர் பற்றி மோடி பேசிய ஒலி இணைப்பையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Tags : Kargil War Victory Day ,Modi , பிரதமர் நரேந்திர மோடி
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...