சென்னை: ஒரகடத்தில் உள்ள சாலை பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். ஒரகடத்தில் அமைந்துள்ள சாலை பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். எச்சரிக்கை பலகைகள், வேக அளவு பலகைகள், அபாய வளைவு, பலமுனை சந்திப்பு, வழிகாட்டி பலகை, வேக அளவு கோல், சிக்னல், நடைபாதை கோடுகள், ரப்பர் வேகத்தடை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை ஆய்வு செய்தார். அப்போது, இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் தரமான சாலை மைய குறியீடுகள், கனமான சமிக்கை பலகைகள் மற்றும் பளிச் வகையிலான பிரதிபலிப்பான் ஆகியவை முறையாக அமைக்கப்பட வேண்டும்.
சாலைகளில் அமைக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் கனமாகவும், தரமாகவும், துல்லியமானதாகவும் இருக்க வேண்டும். தெளிவாக அனைத்து மக்களுக்கும் எளிதில் புரியும் வகையில் அமைத்தல், சாலையை பயன்படுத்துவோர் எளிதில் பின்பற்றத்தக்க வகையில் அமைத்தல், பயனாளிகள் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைத்தல் போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, வண்டலூர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையில் ரூ.37.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரயிவே மேம்பால பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இப்பணிகளைத் துரிதப்படுத்தி நவம்பர் மாத இறுதிக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.