×

அரசு பேருந்தில் பெண் பயணிகளிடம் உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும்: நடத்துனர், ஓட்டுனர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்

சென்னை: அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பெண் பயணிகளிடம் உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என நடத்துனர், ஓட்டுனர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநகர் போக்குவரத்து கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநகர போக்குவரத்து கழக சாதாரண கட்டண பேருந்துகளில் எந்தவித பயண அட்டை இல்லாமலும் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள  மகளிர் வரும்போது அனைத்து ஓட்டுனர்கள், நடத்துனர்களும் கீழ்கண்ட 7 நிலையான இயக்க நடை முறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அதன்படி பயணிகள் பேருந்திற்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்.

ஓட்டுனர் பேருந்தை குறித்த பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்தத்திற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக் கூடாது. நடத்துனர்கள் வேண்டும் என்றே பேருந்தில் இடமில்லை என்று ஏறும் பெண் பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது. வயது முதிர்ந்த மகளிர்களுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும். பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ, பேசக்கூடாது.

பேருந்தில் பெண் பயணிகளிடம் உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும். பெண் பயணிகள் ஏறும் போதும், இறங்கும் போதும் கண்காணித்து ஒட்டுனருக்கு சமிக்ஞை செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும். எனினும் இலவச பயணம் மேற்கொள்ளும்போது பெண்களை சரிவர நடத்துவதில்லை. அவர்களை பொது இருக்கையில் அமர அனுமதிப்பதில்லை என செய்தி வெளியாகி உள்ளது. எனவே, மகளிர் கட்டணமின்றி, பேருந்து பயண அட்டை இன்றி பயணிப்பது குறித்த அரசின் உத்திரவினை எவ்வித புகாரும் இன்றி செயல்படுத்த ஏதுவாக அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கும் நன்கு விளக்கிக் கூறி புகார்கள் எழாத வண்ணம்  மகளிர் பயணம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Department of Transportation , Government bus, female passengers, conductor, driver, transport
× RELATED அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்த 3...