மும்பை: ஹாட்ஷாட் ஆப்ஸ் தவிர மேலும் 4 ஆபாச பட ஆப்ஸ்களுடன் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு உள்ளதா என மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, ஆபாச படங்களை உருவாக்கி அதனை மொபைல் செயலிகள் மூலம் வெளியிட்ட புகாரின் பேரில் மும்பை காவல் துறையால் கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்டார். இதன் பிறகு, அவரை போலீசார் கடந்த 23ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 27ம் தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கினார். இதைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குந்த்ராவின் முன்னாள் அந்தரங்க செயலாளர் கானா வசிஷ்ட் உட்பட அவரது அலுவலகத்தில் பணியாற்றிய பலரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான அரவிந்த் ஸ்ரீவஸ்தவா என்ற யாஷ் தாக்குர், குந்த்ராதான் கைது செய்யப்படாமல் இருக்க மும்பை குற்றப்பிரிவு போலீசுக்கு ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இது பற்றி போலீஸ் தரப்பில் இதுவரை எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. இதற்கிடையில், ஆபாச படங்களை ஹாட்ஷாட் என்ற செயலி மூலம் பதிவேற்றம் செய்து ஒளிபரப்பியதால் அந்த ஆப்ஸ்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப்ஸ்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட ஆப்ஸ் தவிர மேலும் 3 அல்லது 4 ஆபாச பட ஆப்ஸ்களில் படங்களை பதிவேற்றம் செய்வதில் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த ஆப்ஸ்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள படங்கள் உள்ளிட்ட விவரங்கள், வேறு பரிவர்த்தனைகள் நிகழ்ந்துள்ளதா என ஆய்வு செய்து கண்காணித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், ஆபாச பட வழக்கில் குந்த்ரா சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது வக்கீல் தெரிவித்தார்.
* ஆப்சில் ஆபாச படம்? ஷில்பா வாக்குமூலம்
ஆபாச பட விவகாரம் தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், ஹாட்ஷாட் ஆப்ஸ் மூலம் ஆபாச படம் பதிவேற்றம் செய்து ஒளிபரப்பியது தொடர்பாக ராஜ் குந்த்ராவை கைது செய்த பிறகு, அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்தினோம். அவர் தனக்கு தெரிந்தவற்றை வாக்குமூலமாக அளித்தார். அப்போது, ஹாட்ஷாட் ஆப்ஸ் பற்றி கேட்டபோது, அந்த ஆப்சில் எந்த விதமான படங்கள் இருந்தன என்பது பற்றி தெரியாது. அந்த விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
* மேலும் 3 பேருக்கு சம்மன்
ராஜ் குந்த்ரா ஆபாச பட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், அவரது நிறுவன ஊழியர்கள் சிலரிடம் விசாரணை நடத்துகின்றனர். இதில் மாடல் அழகியான கானா வசிஷ்ட் உட்பட 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் நேற்று ஆஜர் ஆகவில்லை என போலீசார் கூறினர்.
* அப்ரூவராகும் 4 ஊழியர்கள்
ராஜ் குந்த்ராவின் வியான் இண்டஸ்டிரீசில் பணியாற்றிய ஊழியர்கள், ஆபாச பட விவகாரம் குறித்து போலீசாரிடம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 4 பேர் இந்த வழக்கில் அப்ரூவர் ஆக உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
* ரகசிய கப்போர்டில் கிரிப்டோ கரன்சி
ஆபாச பட வழக்கில் ராஜ் மும்பை, அந்தேரியில் உள்ள குந்த்ராவின் அலுவலகங்களான வியான் இன்டஸ்டிரீஸ் மற்றும் ஜெஎல் ஸ்டிரீம் அலுவலகங்களில் போலீசார் ரெய்டு நடத்தினர். அப்போது அங்கு ரகசிய கப்போர்டு இருப்பதை கண்டு பிடித்தனர். இந்த கப்போர்டுகளில் கிரிப்டோ கரன்சி ஆவணங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
* ‘பெண்கள் பட்டியலை வெளியிடுவேன்’
இந்த வழக்கில் மாடல் அழகி கானாவசிஷ்டிடம் விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் கூறுகையில், ‘‘ஆபாச பட தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் பட்டியல் அனைத்தையும் போலீசிடம் கூறுவேன். எனக்கு தெரிந்த அத்தனை விவரங்களையும் மறைக்காமல் தெரிவிப்பேன். குந்த்ரா யாரையும் கட்டாயப்படுத்தி ஆபாச படம் எடுக்கவில்லை. ஷெர்லின், பூணம் பாண்டே பொய் சொல்கின்றனர்’’ என்றார்.