×

தமிழகத்தில் அடுத்த 4 நாள் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகக்கூடும். அதேபோல் நாளை முதல் வருகிற 28ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

மன்னார் வளைகுடா, தெற்கு வங்க கடல், மத்திய வங்க கடல், கர்நாடகா, கேரள கடலோர பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல், வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வருகிற 28ம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Tags : Tamil Nadu ,Meteorological Center , It will rain in Tamil Nadu for the next 4 days: Meteorological Center information
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...