திருவனந்தபுரம்: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ளது உப்புதரை கிராமம். இங்குள்ள புளிங்கட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ், ெசல்வராஜ். இருவரும் அங்குள்ள தோட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த 4 நாட்களாக சுரேஷ், செல்வராஜ் வீடுகளில் இரவு பகலாக கற்கள் தொடர்ந்து விழுந்தன. வெளியே வந்து பார்த்தபோது யாரையும் காணவில்லை. இது குறித்து வாகமண் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருவரது வீட்டுக்கும் சென்ற விசாரித்தனர். அப்போதும் கற்கள் விழுந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து இடுக்கி மாவட்ட புவியியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வந்து ஆய்வு நடத்தியதில், உண்மை தெரிந்தது. பூமிக்கு அடியில் சில பகுதியில் நீர் அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், நிலத்தில் விரிசல் ஏற்பட்டு பூமிக்கு அடியில் இருக்கும் கற்கள் மேலோங்கி தெறித்து விழும். இப்படிதான் இருவரின் வீடுகளிலும் கற்கள் விழுந்திருக்கலாம் என அவர்கள் கூறினர். இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் சுரேஷின் வீட்டினுள் சிமென்ட் தரையில் விரிசல் ஏற்பட தொடங்கியது. இதனால் பீதியடைந்த அவர், குடும்பத்துடன் வேறு வீட்டிற்கு சென்று விட்டார். இது பற்றி புவியியல் துறை ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.