×

சார்பட்டா படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்துள்ளது வருத்தம் அளிக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  சார்பட்டா படத்தில் எம்ஜிஆருக்கும் விளையாட்டு துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. திரைப்பயணம் தொடங்கி அரசியல் பயணம் வரை  விளையாட்டை விடாபிடியாய் கைக்கொண்டவர் எம்ஜிஆர். அவர் படங்களை  முன்மாதிரியாக கொண்டு, ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்திற்கு வந்து வீரர்கள் ஆகியுள்ளனர். மான்கொம்பு சண்டை, வாள் சண்டை, குத்து சண்டை, குதிரையேற்றம் என ஒவ்வொரு படத்திலும் விளையாட்டு வீரராகவே வெளிப்படுத்தி கொண்டவர்  எம்ஜிஆர். முக்கியமாக குத்துச்சண்டையை மிகவும் நேசித்தவர்  எம்ஜிஆர்.

 1980ம் ஆண்டு தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்து சண்டையில் பங்கேற்பதாக நாக் அவுட் நாயகன் முகமது அலியை சென்னை அழைத்து வந்தவர் எம்ஜிஆர். போட்டி முடிந்து தன் ராமாவாரம் தோட்டத்திற்கு அழைத்து மீன் குழம்பு பரிமாறினார். அந்த அளவிற்கு குத்துச்சண்டை மீது காதல் கொண்டிருந்தார் எம்ஜிஆர். ஆனால் சார்பட்டா திரைப்படம் திமுக  ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள், மதிக்கப்பட்டது போலவும் எம்ஜிஆர்  அவர்களை கைகழுவியது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கலை என்பது வரலாற்றை விட கூர்மையானது. எனவே அதில் உண்மைகள் மறைக்கப்படுவது சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல, வருங்கால தலைமுறைக்கே செய்யும் துரோகம்.எதிர்க்கட்சியின் மீது புழுதிவாரி தூற்ற வேண்டுமா ரஞ்சித்?  எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த எம்ஜிஆரை, சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : MGR ,Former Minister Jayakumar , Charbatta, MGR, former minister, Jayakumar, condemned
× RELATED பேட்டை எம்ஜிஆர் நகரில் அடிப்படை வசதி...