மும்பை: ஆபாச படம் வெளியீடு, பணப்பரிமாற்ற விவகாரத்தால் கணவர் சிக்கிய நிலையில், தொழில் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து ஷில்பா ஷெட்டி திடீரென விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஆபாச படங்களை வெளியிட்ட விவகாரத்தில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் வரும் 27ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஷில்பா ஷெட்டியின் வீட்டிற்கே சென்று நேற்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், ஆபாச படங்கள் வெளியீட்டில் ஷில்பா ஷெட்டியின் பங்கு மற்றும் வங்கிக் கணக்கு விபரங்கள் குறித்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், போலீசாரின் வலையில் சிக்கியுள்ள ஷில்பா ஷெட்டி, ‘வயான்’ தொழிற் நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீஸ் தகவல்களின்படி, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடமிருந்து ராஜ் குந்த்ராவின் வங்கிக் கணக்கில் பெரும் தொகை பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த மோசடி விவகாரங்கள் ஷில்பா ஷெட்டிக்கு தெரியுமா? என்பதை அறிய அதிகாரிகள் விரும்புவதாக கூறப்படுகிறது. நடிகையின் வங்கி கணக்கு விபரங்களும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான நகைச்சுவை படமான ஹங்காமா - 2 படத்தை பார்க்கும்படி தனது ரசிகர்களை ஷில்பா ஷெட்டி கேட்டுக் கொண்டதால், ஆபாச படங்களுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது. ராஜ் குந்த்ரா கைதை தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள நிறுவனத்திடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.