டெல்லி : ‘‘கோவிட் நீண்ட கால போராட்டம் என்பதால், அதில் மன நிறைவுக்கு வாய்ப்பில்லை எனவும், நேர்மறையான செய்திகள் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களை ஊக்குவிக்க முடியும் என்பதால் ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள், சமூகத்தில் செல்வாக்கு பெற்றவர்களாக உள்ளனர் என ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் யுனிசெப்புடன் இணைந்து, பத்திரிகை தகவல் அலுவலகம், கள விளம்பர அலுவலகம், தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி அதிகாரிகள் மற்றும் நிருபர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை இன்று நடத்தியது. இதில் 150 பேர் கலந்து கொண்டனர்.
இதில் சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் பேசியதாவது: .கொரோனா நீண்ட கால போராட்டம். இதில் தன்னிறைவுக்கு வாய்ப்பில்லை. நேர்மறையான செய்திகள் மூலம், கோவிட் தடுப்பூசி போட மக்களை ஊக்குவிக்க முடியும் என்பதால், ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் சமூகத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர். சமூக ஊடகங்களில் வெளியாகும் பொய்களை களைந்து, உண்மைகளை தெரிவிப்பதன் மூலம், மக்களிடையே தடுப்பூசி தயக்கத்தை போக்குவதில் ஊடகங்கள் ஆக்கப்பூர்வமாக பங்காற்றுகின்றன.
9 மாநிலங்களில், கோவிட் சிகிச்சை பெறுபவர்கள் இன்னும், 10,000க்கும் அதிகமாக உள்ளனர். கோவிட் இரண்டாம் அலை இன்னும் முடியாததால், ஆதாரம் அடிப்படையிலான செய்திகள் மூலம், கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும், இதில் அலட்சியமாக இருந்தால், மீண்டும் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்களுக்கு நினைவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு லாவ் அகர்வால் கூறினார்.