சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் பா.வளர்மதி, கொள்கை பரப்பு துணை செயலாளர் வைகைச்செல்வன் ஆகியோர் அந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அதிமுக தலைமை கழக நிர்வாகிகளாகவும், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகவும் கீழ்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி,
அதிமுக மகளிர் அணி செயலாளர் - பா.வளர்மதி (அதிமுக செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்), மகளிர் அணி இணை செயலாளர் - மரகதம் குமரவேல் எம்எல்ஏ (செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்), அதிமுக இலக்கிய அணி செயலாளர் - வைகைச்செல்வன் (செய்தி தொடர்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்), அதிமுக வர்த்தக அணி செயலாளர் - வி.என்.பி.வெங்கட்ராமன் (ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளர், சென்னை புறநகர் மாவட்டம்), இணை செயலாளர் - ஏ.எம்.ஆனந்தராஜா (சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர், தூத்துக்குடி தெற்கு மாவட்டம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். அதிமுக மகளிர் அணி செயலாளராக இருந்த விஜிலா சத்தியானந்த், அக்கட்சியில் இருந்து விலகி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்த வாரம் திமுகவில் இணைந்தார்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி அதிமுக மகளிர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பதவியில் வளர்மதி இருந்தார். பின்னர் அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கிய ஜெயலலிதா, கோகுலஇந்திராவை நியமித்தார். தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு வளர்மதிக்கு மீண்டும் மகளிர் அணி தலைவி பதவி வழங்கப்பட்டுள்ளது.