சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டு மாணவர்கள் சார்பாக அதிமுக, தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. பெட்ரோல் விலையை ரூ.5ம், டீசல் விலையை ரூ.4ம் குறைப்பதாகவும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தருவதாகவும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மக்களின் நலனுக்காகவும், பொருளாதார வளர்ச்சி மேம்படவும் மேற்சொன்ன கோரிக்கைகளை திமுக அரசின் கவனத்திற்கு கொண்டுவர வருகின்ற 28ம் தேதி காலை 10 மணி அளவில் அதிமுகவினர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில் தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.