புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த பிரகாஷ் குப்தா, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) சட்டத்தை மீறியதற்கான வழக்கை எதிர்கொண்டுள்ளார். இதில், சட்டப்பிரிவு 24ஏ-ன் கீழ் சமரசத் தீர்வு காண்பது தொடர்பான தனது வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சட்டப்பிரிவு 24ஏ-ன் கீழ் சமரசத் தீர்வு காணக் கூடிய குற்றங்களுக்கு வழக்கின் தன்மையை பொறுத்து, அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்கலாம். இதன் மூலம், குற்றம்சாட்டப்பட்டவர் அபராதம் செலுத்தி, குற்றச்சாட்டில் இருந்து வெளியே வரலாம்.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு நேற்று அளித்துள்ள தீர்ப்பில், ‘குற்ற விசாரணைகளில் முடிவெடுக்கும் தன்னாட்சி அதிகாரம் செபிக்கு இல்லை. எனவே, சமரத் தீர்வு காணும் குற்றங்களில் நீதிமன்றம் முடிவெடுக்க செபியின் ஒப்புதல் கட்டாயமில்லை. அதே நேரம்,பங்கு வர்த்தகத்தில் நிபுணத்துவம் வாய்ந்த செபியின் கருத்தை அறிய வேண்டியது அவசியம்,’ என தெரிவித்தனர்.