நாகர்கோவில்: கொரோனா தொற்று கட்டுக்குள்கொண்டு வந்ததையொட்டி பல தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. பொது போக்குவரத்து இயக்கமும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதுபோல் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் இயங்க தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் கூட்டம் நாகர்கோவில் நகர பகுதியில் அதிக அளவு இருந்து வருகிறது. நாகர்கோவிலில் ஜவுளி கடைகள், நகை கடைகள் மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் செயல்பட தொடங்கி உள்ளதால் பணிக்கு வரும் இளம்பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து தற்போது முக்கிய சந்திப்புகளில், நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய வாகனத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த ரோந்து வாகனத்தில் சுழலும் நவீன கேமராக்களுடன் 5 கேமராக்கள் உள்ளது. காலை மாலை வேளைகளில் அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் இந்த வாகனம் ரோந்து பணியில் ஈடுபடுகிறது. வாகனத்தின் உள்ளே போலீசார் இருந்து குற்றசெயல்கள் நடக்கிறதா என கண்காணிக்கின்றர். மேலும் இந்த ரோந்து வாகனத்தில் பதிவாகும் பதிவுகளை எஸ்பி பத்ரிநாராயணன் மற்றும் எஸ்பி இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் அவர்களது செல்போனில் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மேல் அதிகாரிகள் எந்த நேரத்திலும் உத்தரவு பிறப்பிக்க கூடும் என ரோந்து வாகனத்தில் ஈடுபடும் போலீசார் உஷராக தங்களது பணியை செய்து வருகின்றனர்.