×

ஆண்டுக்காண்டு குறையும் மழையளவு: வடகிழக்கு மழையை நம்பியே நடக்கும் விவசாயப்பணிகள்..! நீர்நிலைகளை பராமரிக்க விவசாயிகள் கோரிக்கை

சிவகங்கை, ஜூலை 23: சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குறைவான மழையே பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 904.7மி.மீ ஆகும். ஆனால் கடந்த 2008ம் ஆண்டிற்கு பிறகு ஆண்டுதோறும் சீரான அளவில் மழை பெய்யவில்லை. 2008ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இடைப்பட்ட 9 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2008ம் ஆண்டு 1283மி.மீ மழை பெய்ததே அதிகமான அளவாகும். கடந்த 2012ம் ஆண்டு 549மி.மீ மழை பெய்ததே இந்த 9 ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவில் பெய்த மழை அளவாகும். 2009ம் ஆண்டு 772மி.மீ, 2010ம் ஆண்டு 916மி.மீ, 2011ம் ஆண்டு 872மி.மீ, 2013ம் ஆண்டு 705மி.மீ மழை பெய்தது. கடந்த 2014ம் ஆண்டு 920மி.மீ மழை பதிவாகியுள்ளது. 2015ம் ஆண்டில் 1097மி.மீ, 2016ம் ஆண்டு 706.5மி.மீ மழை பெய்துள்ளது. 2017ம் ஆண்டு 976.6மி.மீ மழை பதிவாகியுள்ளது.

2018ம் ஆண்டு 924.4மி.மீ மழை, 2019ம் ஆண்டு 1006.7மி.மீ, 2020ம் ஆண்டு 1117.6மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஆண்டுதோறும் தென் மேற்கு பருவமழை 309.6மி.மீ, வடகிழக்கு பருவமழை 413.7மி.மீ சராசரியாக பெய்ய வேண்டும். இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 406.84மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. தென் மெற்கு பருவமழை காலகட்டமான தற்போது பெரிய அளவிலான மழை பரவலாக இல்லை. இதனால் வடகிழக்கு பருவமழையை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையை நம்பி மட்டுமே விவசாய பணிகள் செய்யப்படும். ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழை சராசரியாக இருப்பதில்லை என்பதால் அதை நம்பி விவசாயம் செய்வதில்லை.

சில ஆண்டுகளில் நன்றாக மழை பெய்தாலும் விவசாயம் சரிவர இருப்பதில்லை. இந்த ஆண்டும் வடகிழக்கு பருவ மழையை நம்பியே விவசாய பணிகள் செய்யப்படும் நிலை உள்ளது. கடந்த ஆண்டு கூடுதல் மழை பெய்தும் கண்மாய், குளங்களில் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நீர் இல்லாமல் போனது. நீர்வரத்து கால்வாய்கள் சரிவர பராமரிப்பில்லாதது, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து பாதிப்பு உள்ளதை ஆய்வு செய்ய வேண்டும். தொடர்ந்து கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கான வரத்து கால்வாய்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : northeastern , Rain, Northeast Rain, Agricultural Works
× RELATED வடகிழக்கு மாநில மக்களை கைவிட்டுவிட்ட...