கடலூர்: விவசாயிகளின் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் பொருட்டு உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலூர் உழவர் சந்தை பகுதியில் 90 நிரந்தர கடைகள் உள்ளன. சராசரியாக 90 முதல் 100 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்காக தினமும் கடலூர் உழவர் சந்தை கொண்டு வருகின்றனர்.
உழவர் சந்தையின் வெளிப்பகுதியில் சிதம்பரம் சாலையை ஆக்கிரமித்து பல்வேறு கடைகள் இடம் பிடித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் நோய் தொற்று பரவல் தொடர்பான சூழலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் உத்தரவின்பேரில் உழவர் சந்தையின் வெளிப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.