சென்னை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது மனைவியின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது. போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது அவரது பெயரிலும், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதை ஒருமாத காலம் ஆய்வு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த சொத்துகுவிப்பு வழக்கின் அடிப்படையில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். குறிப்பாக கரூரில் அவருக்கு சொந்தமான வீடுகள், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றன.
சென்னையை பொறுத்தவரை அவர் தங்கியிருக்கும் ராஜா அண்ணாமலைபுர வீட்டிலும், உதவியாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 25 லட்சம் பணமும், முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்பான பல்வேறு முதலீடுகள் குறித்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் வங்கி லாக்கர்களை சோதிக்க லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்திருக்கிறது. அவர் அமைச்சராக இருந்த போது எவ்வாறெல்லாம் பணத்தை வங்கிகளில் மாற்றி இருக்கிறார் என்பது குறித்து சோதனை செய்ய முடிவு செய்து எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள வங்கி லாக்கரில் சோதனையிட லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளது.