பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அரங்கநாதன் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் படத்தை அதிமுகவினர் வைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தலைமை ஆசிரியர் அறையில் இருந்த ஜெயலலிதா படத்தை, அங்கிருந்து அகற்றியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பேரூர் செயலாளர் ஏ.ஜி.ரவிச்சந்திரன் தலைமையில் அதிமுகவினர் பள்ளியை முற்றுகையிட்டு, தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்பியுமான கோ.அரி அங்கு சென்று, நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த பொதட்டூர்பேட்டை போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரிடம் சமரசம் பேசினர். பின்னர், அதே இடத்தில் சிறிய அளவிலான ஜெயலலிதா படம் வைக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.