பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அல்லிநகரம் ஊராட்சியின் முன்னாள் தலைவியான மகேஸ்வரி-முருகேசன் மகள் தனலட்சுமி (24), பி.ஏ. ஆங்கிலம் படித்தவர். வேப்பூர் அருகே கொளப்பாடியை சேர்ந்த அண்ணாத்துரை மகன் அருள்பாண்டியன் (29). 10ம் வகுப்பு படித்துள்ள இவர், கோழிப்பண்ணை நடத்தி வந்தார். கொளப்பாடி கிராமத்திலுள்ள தாத்தா வீட்டிற்கு அடிக்கடி வந்த தனலட்சுமியை அருள்பாண்டியன் ஒருதலையாக காதலித்துள்ளார். அவரது பெயரை வலது கையில் பச்சை குத்தியுள்ளார். ஆனால், தனலட்சுமி, அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால், அருள்பாண்டியன் ஆத்திரமடைந்தார்.
கொளப்பாடி கோயில் திருவிழா இன்று நடக்க உள்ளது. இதில் பங்கேற்க தனலட்சுமி தந்தை முருகேசனுடன் நேற்று மதியம் பைக்கில் தாத்தா வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சிறிய வெண்மனி என்ற இடத்தில் மறைந்திருந்த அருள்பாண்டியன் திடீரென பைக்கை பின்தொடர்ந்து சென்று தனலட்சுமி முதுகில் ஈட்டியால் குத்திவிட்டு தப்பி விட்டார். ரத்த வெள்ளத்தில் பைக்கில் இருந்து விழுந்தவரை முருகேசன் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் இறந்தார். இதற்கிடையில் பைக்கில் தப்பி சென்ற அருள்பாண்டியன், கோழிப்பண்ணையில் இருந்த வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.