×

புனேவில் ஏடிஎம் இயந்திரம் வெடிவைத்து தகர்த்து கொள்ளை : மர்ம நபர்கள் பணத்தை அள்ளிச் சென்றனர்!!

மும்பை: புனேயில் உள்ள ஏடிஎம் மையத்தில் குண்டு வைத்து, இயந்திரத்தில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே அடுத்த பிம்ப்ரி சிஞ்ச்வாட், சகான் எம்.ஐ.டி.சி. தொழிற்பேட்டை பாம்பொலியில் வங்கி ஒன்றின் ஏடிஎம் மையத்திற்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் அதிரடியாக திடீரென ஏடிஎம் இயந்திரத்துக்கு வெடிகுண்டு வைத்து சேதப்படுத்தினர்.

பின்னர், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து சிதறிய பணத்தை அள்ளி சென்றனர். அடுத்த நாள் காலை, ஏடிஎம் இயந்திரம் வெடித்து சிதறி கிடந்த காட்சியை பார்த்த அக்கம் பகுதியினர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், விசாரணை நடத்தியதில் கொள்ளையை அரங்கேற்ற ஏடிஎம்மை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது உறுதியானது.

அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, 2 மர்ம நபர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்து. அந்த ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.30 லட்சம் வரை பணம் கொள்ளை போயிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஏடிஎம் இயந்திரத்தை வெடிக்க செய்ய டிஎன்டி டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகிறோம்’ என்றனர். கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்துக்கு வெடிகுண்டு வைத்து பணத்தை அள்ளிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Pune , புனே
× RELATED அரசு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்...