×

எத்தனை ஆட்சியாளர்கள், எம்எல்ஏக்கள் ஏழைகளாக உள்ளனர்?.. இந்தியா ஏழை நாடு என போக்குவரத்து கழகம் கூறியதற்கு நீதிபதிகள் காட்டம்!!

சென்னை : மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இல்லாத புதிய பேருந்துகளை வாங்க கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் புதிதாக 4000 பேருந்துகளை வாங்க இருப்பதாகவும், அதில் 10 சதவீத பேருந்துகள் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வசதியுடனும், 25 சதவீத பேருந்துகள் சக்கர நாற்காலி உதவியுடன் மாற்றுத் திறனாளிகளை ஏற்றும் வசதியுடனும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை போன்ற பெருநகர சாலைகளில் இது சாத்தியமற்றது என்றும், சக்கர நாற்காலி மூலம் மாற்றுத் திறனாளிகளை ஏற்றியிறக்க கூடுதல் நேரமாகும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து பேருந்துகளிலும் தாழ்தள வசதியுடன் இருக்க வேண்டும். எனவே புதிய பேருந்துகள் வாங்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்”. எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னையை பொறுத்தவரைக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் 10% பேருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகம் முழுவதும் மோசமான சாலைகள் உள்ளது. எனவே சாலைகளை மேம்படுத்திய பிறகு 2016 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதனிடையே மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய ஒரு பேருந்துக்கு ரூ. 58 லட்சம் செலவாகிறது என்றும் எனவே இதில் நிதி பிரச்சனை உள்ளதால் வெறும் 10% பேருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் இந்தியா ஒரு ஏழை நாடு என்று போக்குவரத்து கழகம் தரப்பில் ஒரு கருத்தை முன்வைத்த போது.குறுக்கிட்ட நீதிபதிகள், ஆட்சியாளர்கள், எம்எல்ஏக்கள் என எத்தனை பேர் ஏழைகளாக உள்ளனர் என்று கேள்வி எழுப்பினர். மேலும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தையும் அதனை பின்பற்றி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பானைகளையும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இல்லாத புதிய பேருந்துகளை வாங்க கூடாது என உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.


Tags : Transport Corporation ,India , மாற்றுத்திறனாளி
× RELATED சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு...