சென்னை: திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் தாழம்பூர் ஊராட்சி உள்ளது. இங்கு உள்ள சுமார் 16 ஏக்கர் 30 சென்ட் புன்செய் தரிசு நிலம் அரசுக்கு சொந்தமானதாகும். இந்த நிலத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக அடிப்படை பணியாளர்களுக்கு வீட்டுமனை வழங்க திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலத்தின் ஒரு பகுதியில் தாழம்பூர் ஊராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கும் 50 சென்ட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ரூ.70 கோடி மதிப்புள்ள இந்த நிலம் அண்மையில் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மதில் சுவர் கட்டப்பட்டிருந்தது.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் வருவாய்த்துறையினர் தாழம்பூர் ஊராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை பார்வையிட்டனர். அப்போது, அரசு நிலத்தை சுற்றிலும் மதிற்சுவர் அமைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மதில் சுவர்கள் நேற்று அகற்றப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.70 கோடி என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.