சென்னை: புனேவில் இருந்து விமானம் மூலம் மேலும் 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருத்துவ கிடங்கில் இருந்து நேற்று 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அனுப்பப்பட்டது. 42 பார்சல்களுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், புனேவில் இருந்து நேற்று சென்னை வந்தது. விமான நிலைய அதிகாரிகள், தடுப்பூசி பார்சல்களை தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுதுறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர், குளிர்சாதன வாகனங்களில் ஏற்றி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து தமிழகம் முழுவதும் தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும்.
இதே இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் மேலும் 3,60,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 30 பார்சல்களில் சென்னை வந்தன. அவை சென்னை பெரியமேட்டில் உள்ள ஒன்றிய மருந்து குடோனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இவை புதுச்சேரி உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே நாளில் 8,60,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 72 பார்சல்களில் சென்னைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.