சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், உள்ளாட்சிக்கான நிதி ஒதுக்கீட்டு முறை குறித்து சிந்திப்பது அவசியமாகிறது. கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்-சுயாட்சி அரசுகளுக்கு எந்தெந்த காலக்கட்டத்தில், எவ்வளவு நிதி வழங்கப்படும் என்ற விவரம் அறிக்கையில் இடம்பெற வேண்டும். ‘உள்ளாட்சியில் நல்லாட்சி’ என்பதை பிரகடனம் செய்யும் தமிழக அரசு, ஊரக மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதற்கான சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கான சிறப்பு திட்டத்தை இந்த பட்ஜெட்டில் இருந்தே தொடங்க வேண்டும்.