பல்லாவரம்: தமிழர் முன்னேற்றப்படை கட்சியை நடத்திவரும் பெண் நிர்வாகிக்கு ஆபாச படங்களை அனுப்பி தொந்தரவு கொடுத்த அரியலூர் வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை ராமாபுரம், ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் வீரலட்சுமி(33). இவர் தமிழர் முன்னேற்றப் படை கட்சியை நடத்தி வருகிறார். சில தினங்களாக அவரது செல்போனுக்கு ஆபாச வீடியோக்கள் வந்துள்ளது. இதுகுறித்து வீரலட்சுமி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதுபற்றி விசாரணை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் சங்கர்நகர் காவல்நிலையத்துக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து வீரலட்சுமி செல்போனுக்கு ஆபாச வீடியோக்கள் வந்த செல்போன் நம்பரை டிரேஸ் செய்து பார்த்தபோது அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, கரியன்மேடு கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி (37) என்பவரின் செல்போன் நம்பர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சங்கர்நகர் போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது ஆரோக்கியசாமி கேரள மாநிலத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டது தெரிந்தது. இதையடுத்து கேரளாவுக்கு விரைந்த போலீசார் அங்குவைத்து ஆரோக்கியசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை நேற்றிரவு சங்கர் நகர் காவல் நிலையம் கொண்டுவந்து விசாரித்தனர்.
அப்போது ஆரோக்கியசாமி கூறியதாவது; எனக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக என்னிடம் கோபித்துக் கொண்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தான் தனிமையில் இருந்தேன். அப்போதுதான் எனக்கு பேஸ்புக் மூலம் தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவி வீரலட்சுமியின் அறிமுகம் கிடைத்தது. இதனால் அவரதுசெல்போனில் அடிக்கடி தொடர்புகொண்டு பேசுவேன். ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு கொடுத்து வந்தேன். சாலை அமைக்கும் பணிக்காக அடிக்கடி கேரளா செல்வேன்.
இதனால் போலீசாரால் என்னை கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்து, இது போன்ற தவறை தொடர்ந்து செய்து வந்தேன். எனது செல்போன் சிக்னலை வைத்து என்னை கைது செய்துவிட்டனர். இவ்வாறு கூறினார். இதன் அடிப்படையில், சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.