×

தமிழகத்தின் புராதன பகுதியான ஆதிச்சநல்லூர் நினைவு சின்னமாக அறிவிப்பு: திமுக எம்பி.வில்சன் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

சென்னை: தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் கிமுக 1600க்கு முற்பட்ட நாகரிகத்தோடு தொடர்புடையது. தொல்லியல் துறையால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு வரும் இடங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. இங்கு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள், கி.மு.700ம் ஆண்டுக்கு முந்தையவை என்று சமீபத்திய ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி.வில்சன், தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள், நினைவு சின்னங்கள் பராமரிப்பு, சீரமைப்பு மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பியதற்கு மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பதில் அளித்தார். அதில், ‘‘தமிழகத்தில் உள்ள 412 நினைவு சின்னங்கள் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்தும் நினைவு சின்னங்களையும் பராமரிக்க ரூ.5 கோடி நிதி இந்த ஆண்டு ஒதுங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் தொல்பொருள் ஆய்வு துறை தமிழகத்தில் 7 தேசிய நினைவு சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை புனரமைக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுவரை இந்தியாவில் 21 நினைவுச்சின்னங்கள் மட்டுமே தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்க அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்போது ஆதிச்சநல்லூரும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது’’ என்று பதிலளித்தார்.  கடந்த ஆண்டு இந்த நிதி ஒதுக்கீடு ரூ.5.25 கோடியாக இருந்தது. அதிகபட்சமாக 2019-2020ல் நினைவு சின்னங்களை பராமரிப்பதற்காக ரூ.9 கோடியே 60 லட்சம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Wilson ,EU , Announcement of Adichanallur as a monument in the ancient part of Tamil Nadu: Union Minister answers DMK MP Wilson's question
× RELATED ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகளே...