×

ஆற்று மணல் கடத்தப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பை அருகே ஆற்று மணல் கடத்தப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 27ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்றுமணல் கடத்தப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி தெரிவித்துள்ளனர். எம்.சாண்டுக்கு அனுமதி பெற்றுவிட்டு ஆற்று மணலை திருடி கேரளாவுக்கு கடத்தியதாக உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் பொட்டல் கிராமத்தில் சட்டவிரோதமாக ஆற்றுமணல் கடத்தல் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்காக மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த கிருஷ்டி என்பவர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பொட்டல் கிராமத்தில் எம்.சாண்ட் குவாரிக்காக அனுமதி பெற்று சட்டவிரோதமாக ஆற்றுமணல் எடுத்து கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுகிறது.

இதுகுறித்து ஆய்வு செய்த வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் சட்டவிரோதமாக ஆற்றுமணல் எடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் வழக்கை காவல்துறையினர் உரிய முறையில் விசாரிக்கவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்று மணல் சட்டவிரோதமாக திருடப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலுக்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ள லாரிகள் பறிமுதல் செய்யும் போது அதில் அரசு வழங்கும் போக்குவரத்து அனுமதி சீட்டு கையெழுத்து இல்லாமலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் சம்மந்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே இந்த வழக்கை சிபிசிஐடி மாற்றி உத்தரவிட்டனர். அதேபோல கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி காவல்துறையினர் வசம் ஒப்படைக்க வேண்டும், இந்த வழக்கு தொடர்பாக மணல் எடுப்பதற்கு அனுமதி கொடுத்த இடத்தில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை முடித்து வைத்துள்ளனர்.

Tags : Madurai ,High Court ,CPCID , sand, cbcid
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...