புதுடெல்லி: இது அரசாங்கமா? அல்லது பழைய இந்தி படங்களில் வருவது போன்று வட்டி வசூல் செய்பவரா? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒன்றிய அரசை விமர்சித்துள்ளார். பெட்ரோல், டீசல் வரி வருவாய் கடந்த நிதியாண்டில் 85 சதவீதம் அதிகரித்து ரூ.3.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்தது. இது தொடர்பான ஊடக அறிக்கையை இணைத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஒருபுறம் மக்களை கடன்களை பெற அரசு தூண்டுகிறது. மற்றொரு புறம் மக்களை மிரட்டி வரியை சம்பாதிக்கிறது. இது அரசாங்கமா? அல்லது பழைய இந்தி படங்களில் வருவது போன்று கல்நெஞ்சம் கொண்ட வட்டி வசூலிக்கும் நபரா?,’ என கூறியுள்ளார்.