×

புதுப்பெண் தற்கொலை விவகாரம் கணவன் சிறையில் அடைப்பு

பெரம்பூர்: பெரம்பூர் நீலம் தோட்டம் தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன் (21). இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன், தாய் மற்றும் தந்தை இல்லாமல் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த கீர்த்தனா (21) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த கீர்த்தனா கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டிலிருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திரு.வி.க நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். திருமணமாகி 6 மாதமே ஆன நிலையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், வரதட்சணை கொடுமையால்தான் மன உளைச்சலில் தங்கை தற்கொலை செய்துகொண்டதாக கீர்த்தனாவின் சகோதரி சந்தியா போலீசில் புகார் அளித்துள்ளார். இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தனது தங்கை கீர்த்தனாவின் இறப்பிற்கு அவளது கணவன் ராமசந்திரன், மாமியார் கிருஷ்ணவேணி, அண்ணன், அண்ணி உள்ளிட்டோரே பொறுப்பாளர்கள். வரதட்சணை கொடுமை செய்துள்ள தங்கையின் கணவர் குடும்பத்தார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.  இதையடுத்து திருவிக நகர் போலீசர், ராமச்சந்திரன் மீது கீர்த்தனாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : New bride, suicide, husband, prison
× RELATED டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்