×

அரசு நிகழ்ச்சிகளில் திமுக பிரமுகர் பங்கேற்க தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு நிகழ்ச்சிகளில், திமுக மாவட்ட செயலாளர் பங்கேற்கவும், தலைமையேற்கவும் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது. கோவையைச்சேர்ந்த கோபாலகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கோவை நகர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரான பையா ஆர்.கிருஷ்ணன், அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், தலைமையேற்கவும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று அரசுத்தரப்பில் ஆஜரான வக்கீல் பி.முத்துகுமார் வாதிட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கமாக அரசு நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு எந்த பங்கும் இல்லை என்றபோதும், இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள எந்த தடையும் இல்லை. அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக மாவட்ட செயலாளருக்கு தடை விதித்து உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : DMK , DMK official not barred from participating in government programs: High Court orders
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...