சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், சத்யன் ஆகியோர் ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும், டெல்லியை சேர்ந்த மனிகா பத்ரா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுதிர்தா முகர்ஜி ஆகியோர் பெண்கள் ஒற்றையர் பிரிவிலும், சரத் கமல்-மனிகா பத்ரா இணை கலப்பு இரட்டையர் பிரிவிலும் கலந்து கொள்கின்றனர். ஒலிம்பிக் போட்டியில் 4-வது முறையாக பங்கேற்கும் சரத்கமல் கூறுகையில், ‘கொரோ
னா பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவது கடினமாகவே இருந்தது. இருப்பினும் தினமும் பயிற்சி மற்றும் பயிற்சி முகாம்கள் மூலம் நன்றாக தயாராகி இருக்கிறேன்.
இதற்காக மத்திய, மாநில அரசுகள் ஆதரவும், ஊக்கமும் அளித்தன. சீனா, ஜப்பான், கொரியா மற்றும் ஜெர்மனி, சுவீடன் வீரர்களை எதிர்கொள்வது எப்போதும் சவால்தான். அதேநேரத்தில் தற்போது நமது ஆட்ட தரமும் நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவில் நாங்கள் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது. இதில் 16 இணைகள் மட்டுமே கலந்துகொள்வதால் முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் பதக்கத்தை கைப்பற்றி விடலாம். ஒற்றையர் பிரிவில் நான் (சரத்கமல்), சத்யன் ஆகியோர் நன்றாக தயாராகி இருக்கிறோம். ஒன்றிரண்டு வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தால் பதக்கம் வெல்ல வாய்ப்பு கிட்டும்’ என்று தெரிவித்தார்.