சென்னை: ராகுல் காந்தி போனை உளவு பார்ப்பது மூலம் பாஜகவுக்கு எந்த பயனும் இல்லை என குஷ்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸிலிருந்து விலகிய குஷ்பு, பாஜவில் சேர்ந்தார். சட்டசபை தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். டிவிட்டரில் குஷ்பு அவ்வப்போது தனது கருத்துகளை பதிவு செய்து வந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் அவரது டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது. பிறகு அது மீட்கப்பட்டது. அதற்கு முன்பாக டிவிட்டரில் தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்கள் வருவதால் அதிலிருந்து சில நாட்களுக்கு குஷ்பு விலகியிருந்தார்.
பாஜவில் சேர்ந்த பிறகு அவர் டிவிட்டரில் இணைந்து ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது டிவிட்டர் பக்கம் மீண்டும் முடக்கப்பட்டது. அதில் இருந்த குஷ்புவின் டிவிட்கள் அனைத்தும் நீக்கப்பட்டிருந்தது. மிருகம் ஒன்றின் ஓவியம் வரையப்பட்டு அது குஷ்புவின் டிவிட்டர் முகப்பு பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் டிவிட்டர் கணக்கு முடக்கம் பற்றி போலீஸ் டிஜிபியிடம் குஷ்பு புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; எனது டிவிட்டர் கணக்கை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
எனது பாஸ்வேர்டு மாற்றப்பட்டுள்ளதாக டிவிட்டர் மூலம் எனக்கு தகவல் வந்தது. மேலும் டிவிட்டர் பக்கத்தில் இமெயில் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தனது டிவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக குஷ்பு குற்றம் சாடினார். ராகுல் காந்தி போனை உளவு பார்ப்பது மூலம் பாஜகவுக்கு எந்த பயனும் இல்லை. நான் ஆளுநராக விரும்பவில்லை; அதற்கான வயதும் எனக்கு ஆகவில்லை எனவும் கூறினார்.