×

சென்னை ஐஐடியில் சாதி மத வேறுபாடுகளினால் பின்னோக்கி செல்வதைத் தடுக்க, அரசின் நடவடிக்கைகள் என்னென்ன? : டி.ஆர்.பாலு எம்.பி., கேள்வி.

டெல்லி : திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு டி.ஆர்.பாலு அவர்கள் நேற்று 19 ஜூலை 2021, ,மக்களவையில், இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே நிலவி வரும் சாதி மத வேறுபாடுகளினால் உயர்கல்வியின் தரம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, மத்திய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன என்று மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர், திரு தர்மேந்திர பிரதான், அவர்களிடம் விரிவான கேள்வி எழுப்பினார்.
திரு டி.ஆர்.பாலு அவர்கள், மக்களவையில் எழுப்பிய கேள்வியின் விவரம் வருமாறு:-

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் சென்னை விடுதியில் 2019ஆம் ஆண்டில் குமாரி பாத்திமாவின் தற்கொலையைத் தொடர்ந்து, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே நிலவி வரும் சாதி மத வேறுபாடுகளினால் உயர்கல்வியின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதைத் தடுக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்றும்; தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள் தொடரும் நிலையில், துணைப் பேராசிரியர்கள் பதவி விலகி வருவதைத் தடுக்க ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா? என்றும் விரிவான கேள்வியை எழுப்பினார்.
    
மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர், திரு தர்மேந்திர பிரதான் அவர்கள் அளித்த பதில் வருமாறு:-
    
இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் சாதி மத வேறுபாடுகளைக் களைய அது சார்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், புதிய மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் மனநிலையை சீர்செய்ய தேவையான மனநல மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும், தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்டம்,1961-ன்படி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே எந்த சாதி மத வேறுபாடுகளும் பின்பற்றப்படுவதில்லை என்றும், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர், திரு டி.ஆர்.பாலு அவர்கள், எழுப்பிய கேள்விக்கு, மக்களவையில் மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் பதிலளித்தார்.

Tags : Chennai ,D. R. Palu M. B. , டி.ஆர்.பாலு
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...