நாகை: தேசிய கடல் மீன்வள வரைவு மசோதா உள்ளிட்ட மீனவர்களுக்கு எதிரான எந்தவொரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு ஏற்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள வெள்ளப்பள்ளம் ஆறுகாட்டுத்துறையில் கட்டப்பட்டு வரும் தூண்டில் முள் வளைவுகளை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற மீனவர் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அமைச்சர், மீனவர்களுக்கான டீசல் மானியம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஒன்றிய அரசு கொண்டு வரும் தேசிய கடல் மீன்வள வரைவு மசோதா உள்ளிட்ட மீனவர்களுக்கு எதிரான திட்டங்களை தமிழ்நாடு அரசு உறுதியுடன் எதிர்க்கும் என்றும் அமைச்சர் கூறினார். மீனவர்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்சனைகளுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார். இதையடுத்து வாய்மேடு பகுதியில் படகுகள் எளிதாக கடலுக்குள் சென்று வருவதற்காக வளவனாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர், அப்பகுதிகளில் உள்ள மீனவர்களின் வீடுகளுக்கு சென்று குறைகளை கேட்டறிந்தார்.