திருத்தணி: திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கூடுதலாக ஆதார் பதிவு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருத்தணி நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், தபால் நிலையம் மற்றும் திருத்தணியில் உள்ள இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி உள்பட 9 இடங்களில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக ஆதார் அட்டைக்கும் புகைப்படம் எடுக்கும் பணி சில நாட்களுக்கு முன் மீண்டும் துவங்கியது. இதையடுத்து திருத்தணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் மேற்கண்ட இடங்களில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கவும் பெயர், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கும் வருகின்றனர்.
அதன்படி பட்டாபிராம் பகுதியில் உள்ள திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய ஆதார்டுக்கு விண்ணப்பிக்கவும் முகவரி மாற்றத்துக்காகவும் ஏராளமானோர் வருகின்றனர். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு நாளைக்கு 30 பேருக்கு மட்டுமே ஆதார் பதிவு நடைபெறுகிறது. இந்த பணிகள் மேற்கொள்ள 2 ஊழியர்கள் இருப்பதால் பாதிபேர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் கிராமத்தில் இருந்து வேலைகளை விட்டுவிட்டு வருகின்றவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கூடுதலாக ஆதார் பதிவுகள் செய்யவேண்டும் என கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.